மஞ்சுல் பார்கவா
ஆர். பிராண்டன் பிராட் கணிதப் பேராசிரியர், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
கனடாவில் வசித்து வந்த இந்திய பெற்றோர்களுக்கு 1974ஆம் ஆண்டு மகனாகப் பிறந்த மஞ்சுல் பார்கவா, தனது கல்வியை பெரும்பாலும் நியூயார்க்கிலேயே கற்றிருக்கிறார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பிஏ பட்டம் பெற்ற பார்கவா, 2001ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். 2003ஆம் ஆண்டு முப்பது வயதிலேயே பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியும் அவருக்கு கிட்டியது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மிக இளம் வயதிலேயே பேராசிரியராகப் பதவியேற்றவர்களில் மூன்றாவது நபராக மஞ்சுல் பார்கவா இருந்தார். தன்னுடைய தாத்தாவும், சமஸ்கிருத அறிஞரும், பண்டைய இந்திய வரலாற்று அறிஞருமான புருசோத்தம்லால் பார்கவாவிடம் இருந்து சமஸ்கிருதம் கற்றுக் கொண்டதாக பார்கவா கூறுகிறார். 2003ஆம் ஆண்டு அமெரிக்க கணிதவியல் கழகம் வழங்கிய மெர்டன் ஹாஸ் விருது, 2005ஆம் ஆண்டு தனி கணிதத்தில் ஆய்வு மேன்மைக்கான புளுமெந்தல் விருது, 2005ஆம் ஆண்டு சாஸ்த்ரா பல்கலைக்கழக ராமானுஜன் விருது, 2008ஆம் ஆண்டு அமெரிக்க கணிதவியல் கழகம் வழங்கிய கோல் விருது, 2011ஆம் ஆண்டு ஃபெர்மட் விருது, 2012ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் விருது என்று பல விருதுகளையும் பெற்றார்.
2014ஆம் ஆண்டு தன்னுடைய நாற்பதாவது வயதில் நோபல் விருதிற்கு இணையான ஃபீல்ட்ஸ் பதக்கத்தை பெற்றார். நான்காண்டுகளுக்கொரு முறை சர்வதேச கணிதவியாலளர்கள் மாநாடு நடைபெறும் போது வழங்கப்படுகின்ற இந்த பதக்கத்திற்கான நிதியை டொரன்டோ பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் J.C.ஃபீல்ட்ஸ் அறக்கட்டளை வழங்கி வருகிறது. மாநாட்டுத் தலைவரின் கீழ் செயல்படுகின்ற செயற்குழு உறுப்பினர்களால் குறைந்தபட்சமாக இருவர், அதிகபட்சமாக நால்வர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பதக்கம் வழங்கப்படுகின்றது. கணித துறையில் நோபல் பரிசிற்கு இணையானதாகக் கருதப்படும் இந்த ஃபீல்ட்ஸ் பதக்கம் நாற்பது வயதிற்கு குறைவான கணிதவியலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த பதக்கம் பெறுபவர்களின் நாற்பதாவது பிறந்த நாள் மாநாடு நடைபெறும் ஆண்டின் ஜனவரி 1க்கு முன்னதாக இருக்க கூடாது என்பது விதி. 1974 ஆகஸ்ட் 8 அன்று பிறந்திருந்த மஞ்சுல் பார்கவா தன்னுடைய நாற்பதாவது வயதை எட்டுவதற்கு நான்கு மாதங்கள் இருந்த நிலையில் பதக்கத்தைப் பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவராக சியோலில் நடைபெற்ற மாநாட்டில் ஃபீல்ட்ஸ் பதக்கத்தைப் பெற்றார். ஃபீல்ட்ஸ் பதக்கத்தை மஞ்சுல் பார்கவா வென்ற பிறகு, அவருக்கு இந்தியாவிற்குள் சுனாமி போன்ற விளம்பரங்கள் மிகப் பெரிய அளவில் இலவசமாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. மிக இளம் வயதிலேயே இந்திய அரசால் பத்மவிபூஷண் பட்டம் 2015ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.
டாட்டா அடிப்படை அறிவியல் ஆய்வு மையம், மும்பை ஐஐடி, ஹைதராபாத் பல்கலைக்கழகம் என்று பல நிறுவனங்களிலும் வருகைதரு பேராசிரயராக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. 2015ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியைச் சந்தித்த பிறகு ”நான் அடிக்கடி இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்குமிடையே பறந்து கொண்டிருக்கின்றேன். கல்வி குறித்து ஆர்வம் கொண்டிருக்கும் பல அறிவியலாளர்களிடம் எனக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. பிரதமரின் இந்த திட்டம் (கியான்) பற்றி அவர்களிடம் தெரிவித்து அவர்களை இங்கே அழைத்து வரக் கூடிய வேலையை நான் அவசியம் செய்வேன். இந்த வேலையை செய்து முடிக்கக்கூடிய தனித்துவமான இடத்தில் நான் இருப்பதான எண்ணம் அரசாங்கத்திடம் இருப்பதை நான் உணர்கிறேன். பிரதமரின் இந்த முயற்சிக்கான தூதுவராக என்னை முன்னிறுத்த விரும்புவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்தவர்கள் கூறிய போது, எனக்கு சிறிது சங்கடமாக இருந்தது. இருந்தாலும் நாட்டிற்கு உதவுமேயானால் இதைச் செய்து தருகிறேன் என்று நான் அவர்களிடம் கூறினேன். அவர்களுக்கு உதவுவதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று பத்திரிக்கையாளர்களிடம் பார்கவா தெரிவித்தார். இந்திய கல்வி நிலையங்களுக்குள்ளிருந்து அரசாங்க வட்டத்திற்குள் மிக எளிதாக அவரால் செல்ல முடிந்தது.
2005ஆம் ஆண்டு சாஸ்த்ரா ராமானுஜன் விருது வழங்கப்பட்ட போதிலோ அல்லது 2014ஆம் ஆண்டில் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்பட்ட போதோ மஞ்சுல் பார்கவாவின் கணிதத் துறை சாதனைகள் மட்டுமே விருதுகளை வழங்கியவர்களால் முன்னிறுத்தப்பட்டன. இந்த விருது வழங்கிய போது அமைப்பாளர்களால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்புகளில் பார்கவாவின் எண் கோட்பாடு குறித்தே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கிய பிறகு நிலைமை மாறிப் போனது. பண்டைய சமஸ்கிருத நூல்கள், தபேலா என்று மஞ்சுல் பார்கவா அதற்குப் பிறகு தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஆரம்பித்தார். ராஜஸ்தான் பல்கலைக்கழக முன்னாள் சமஸ்கிருதப் பேராசிரியரான தன்னுடைய தாத்தா புருசோத்தம்லால் பார்கவாவையும், பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் ஹுசேனிடம் தான் தபேலா கற்றுக் கொண்டதையும் செல்லுமிடங்களிலெல்லாம் பேச ஆரம்பித்தார். வழக்கம் போல ஊடகங்களும் அவரது இத்தகைய பேச்சுகளுக்குத் துணை நின்றன.
இன்னும் ஒருபடி மேலே சென்ற மத்திய அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கை வரைவைத் தயாரிக்கும் குழுவில் மஞ்சுல் பார்கவாவை உறுப்பினராக 2017ஆம் ஆண்டு நியமனம் செய்தது. மஞ்சுல் பார்கவாவின் இத்தகைய செல்வாக்கிற்கான காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அவரது குடும்ப பின்னணியில் இருந்து துவங்கலாம்.
மஞ்சுல் பார்கவாவின் தாய் வழி தாத்தா புருசோத்தம்லால் ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் நகரில் 1909ஆம் ஆண்டு பிறந்தவர். தன்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே நன்றாகப் படித்து வந்த புருசோத்தம்லால், லக்னோ பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டத்தில் முதல் மாணவனாகத் தேறி விக்டோரியா மகாராணி தங்கப்பதக்கத்தை பெற்றார். மொழிகள் மற்றும் வரலாறு குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் சமஸ்கிருதம், ஹிந்தி, வரலாறு ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றார். லக்னோ பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத சாஸ்திரி பட்டம் முடித்தார். வேத சமஸ்கிருத பிரச்சாரகர்கள் சங்கம் அளித்த வித்யாமகோததி விருதைப் பெற்றார். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் 1961ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சமஸ்கிருத துறையின் முதல் தலைவராக பதவியேற்ற அவர், 1973ஆம் ஆண்டு வரையிலும் பனிரெண்டு ஆண்டு காலம் துறைத் தலைவராக பணி புரிந்தார். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்வதற்கு முன்பாக, ஜோத்பூரில் இருந்த ஜஸ்வந்த் கல்லூரியில் சில ஆண்டுகளும், ஜெய்ப்பூரில் புதிதாகத் துவங்கப்பட்டிருந்த ராஜஸ்தான் கல்லூரியில் பல ஆண்டுகளும் பணி புரிந்திருந்தார். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கல்விப் பேரவை, ஆட்சிப் பேரவை, ஆட்சி மன்றக் குழு, பதிப்பக வாரியம், நூலக குழு என்று பல வகைகளிலும் பணியாற்றிய புருசோத்தம்லால், ராஜஸ்தான் மாநில சமஸ்கிருத ஆலோசனைக் குழு, ராஜஸ்தான் இடைநிலை கல்வி வாரியம், ஜோத்பூர், உதய்பூர் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருத பாடத்திட்டக் குழு என்று பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக பணியாற்றினார். 2009ஆம் ஆண்டு டிசம்பரில் அவருடைய நூற்றாண்டை உலகளாவிய அறிஞர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கமாக நடத்தி ராஜஸ்தான் பல்கலைக்கழகம் மிகச்சிறப்பாக கொண்டாடியது. புருசோத்தம்லாலின் மகளும், மஞ்சுல் பார்கவாவின் தாயருமான மீரா பார்கவா நியூயார்க் ஹொஃப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். சிறு வயது முதலே மஞ்சுல் பார்கவாவின் கணித ஆசிரியராக இவரே இருந்திருக்கிறார், மஞ்சுல் அளித்த பல நேர்காணல்களிலும் இதனை அவர் உறுதி செய்திருக்கிறார்.
2015க்குப் பிறகு பத்மபூஷண் மஞ்சுல் பார்கவா மாறிப் போனதைப் பார்த்தோம். 2017ஆம் ஆண்டு கல்விக் கொள்கை வரைவு தயாரிப்புக் குழுவில் இடம் பெறுவதற்கு முன்னதாக, 2016 ஜனவரி 2 சென்னையில் உள்ள மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரியில் ‘சமஸ்கிருதத்திற்கும் கணிதத்திற்குமான தொடர்புகள்’ என்ற தலைப்பில் ஏறத்தாழ 75 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். அந்த உரையின் சுருக்கம் இதோ….
கணித வரலாறு மீது அதிக ஆர்வம் கொண்ட நான், என்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே பண்டைய இந்திய படைப்புகளின் மூலமாக பல்வேறு கணித கோட்பாடுகளைக் கற்றுக் கொண்டேன். பின்னர் பள்ளிக்குச் சென்ற போது, அந்தக் கோட்பாடுகள் அனைத்தும் வேறொருவரது பெயரில் அழைக்கப்படுவதைக் கண்டேன். இந்த கோட்பாடுகள் ஏன் இவ்வாறு தவறாக அழைக்கப்படுகின்றன, இத்தகைய தவறுகளை ஏன் யாரும் திருத்த முன்வரவில்லை என்பது போன்ற கேள்விகள் எனக்குள்ளே எழுந்து கொண்டே இருந்தன. இவ்வாறாகவே கணிதத்தின் மீதான ஆர்வம் எனக்குள் எழுந்தது. அவ்வாறு உண்மையான வரலாற்றை அறிந்து கொண்டது என்னுடைய ஆய்வுகளுக்கு உதவிகரமாக இருந்தது. மூலத்திலிருந்து நேரடியாகப் படிப்பதன் மூலம், அந்த கருத்து எவ்வாறு உருவானது என்பது பற்றிய அறிவு நமக்கு கிடைக்கும். ஆனால் பள்ளிகளில் இவ்வாறான கோட்பாடுகள் எவ்வாறு கண்டறியப்பட்டன என்பது குறித்து பயிற்றுவிக்கப்படுவதே இல்லை. மூலங்களைக் கண்டடைந்ததாலேயே சில ஆய்வுகளில் என்னால் வெற்றி பெற முடிந்தது. அவ்வாறு மூலங்களைப் படிப்பது என்று சென்ற வேளையில், சில சமயங்களில் காஸ், டிரிக்லட், இன்னும் சில சமயங்களில் பிங்களா, ஹேமச்சந்திரா என்று என்னால் கண்டடைய முடிந்தது.
பண்டைய இந்தியாவில் இருந்த கணிதம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாவதை நாம் பார்த்திருப்போம். பண்டைய இந்தியாவிற்கு எதுவுமே தெரியாது என்று ஒருசாராரும், பண்டைய இந்தியாவில் இருந்தவற்றை மட்டுமே நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மற்றொரு சாராருமாக இருவகையான விவாதங்கள் அடிப்படை ஆதாரங்கள் எதுவுமின்றி தற்போது நடைபெற்று வருகின்றன. ஆங்கிலத்திலோ அல்லது வேறொரு மொழியிலோ மொழிபெயர்க்கப்படாமல் பண்டைய ஆய்வுகள் ஏராளமானவை சமஸ்கிருதத்திலேயே இருந்து வருவதுதான் உண்மையான பிரச்சனை. இந்த இடத்தில்தான் மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரி மற்றும் நாடு முழுவதிலும் இருக்கின்ற சமஸ்கிருத கல்லூரிகள் உதவ முடியும். வெறுமனே சமஸ்கிருதத்தைப் படிப்பது என்றில்லாமல், சமஸ்கிருத இலக்கியங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைக் கற்றுக் கொண்டு, தேசிய அளவில் நடைபெறுகின்ற பொது விவாதங்களுடன் அவற்றை நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும் என்று இங்குள்ள மாணவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். சரியான விவாதங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு சமஸ்கிருத மொழியை அறிந்து கொண்டிருப்பவர்கள் உதவ வேண்டும். சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்பவர்களுக்கு மற்ற விஷயங்களிலும் ஆவல் ஏற்படும். இங்கே இருப்பவர்களில் ஆங்கில அறிவு கொண்டவர்கள் பொதுவெளிகளில் விவாதிக்கப்படுகின்ற பண்டைய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முன்வர வேண்டும். அவ்வாறு செய்யும் போது பொது விவாதங்களில் கருத்துக்களை முன்வைப்பதற்கான உந்துதல் உங்களுக்கு கிடைக்கும். அவ்வாறு விவாதங்களில் தலையிட விரும்பாதவர்கள் மற்றவர்களுக்கு உண்மையான மொழிபெயர்ப்புகளை அளிப்பதன் மூலம் மிகச் சரியான, அறிவியல்பூர்வ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்கள் நடைபெறுவதற்கு உதவ முடியும். சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்வது வெறுமனே அதனைக் கற்றுக் கொள்வதாக இல்லாமல், நல்ல விஷயங்களுக்கு அதைப் பயன்படுத்துவதாக, சரியான, தெளிவான வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பதோடு நின்று விடாமல் நவீன முறையில் சிந்திப்பதற்கும் உங்களை நீங்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். தத்துவம், கணிதம் என்று உங்களுக்கு ஆர்வம் உள்ள விஷயங்களில் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கும் சமஸ்கிருதத்தை அந்த நவீனத்தோடு உங்களால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும்.
பொதுமக்களால் அறியப்படாத நூல்கள் அனைத்தையும் நாம் வெளிக் கொணர வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யும் போது அதனை நாம் மிகச் சரியாக அறிவியல்பூர்வமாக செய்ய வேண்டும். அப்போதுதான் இப்போதிருக்கும் கல்வி நிறுவனங்கள் தங்களுடைய தவறுகளைத் திருத்திக் கொண்டு தங்களைச் சரி செய்து கொள்ள முடியும். சரியான, தவறில்லாத என்பதை நான் அழுத்திக் கூற விரும்புகிறேன். இந்தியாவின் பழமையான மொழிகளுக்குள் ஏராளமான பொக்கிஷங்கள் மறைந்து கிடக்கின்றன. இவை தத்துவம், கவிதை, கதை கூறல், அறிவியல் என்று அனைத்து அறிவு குறித்தனவாகவும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நாம் பாதுகாக்க வேண்டும். இத்தகைய அறிவைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பழமையான மொழிகளை மக்கள் இழந்து வருகின்றனர். எனவேதான் அவ்வாறான மொழிகளை அறிந்திருக்கும் நமக்கு அந்த பொக்கிஷங்களை வெளிக் கொணர வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கிறது என்று சொல்கிறேன். மறைந்திருக்கும் இந்த அறிவை யாரும் இழந்து விடாமல், அவற்றை உயிர்ப்பித்து தர வேண்டிய கடமையைக் கொண்டிருக்கும் இந்த கல்லூரி மாணவர்களுக்கு எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களைப் போன்று நான் சமஸ்கிருத அறிஞன் அல்ல. எனக்குத் தேவையானவற்றை அறிந்து கொள்ளும் அளவிற்கே நான் சமஸ்கிருதத்தை கற்றுக் கொண்டிருக்கின்றேன். எப்போதெல்லாம் எனக்கு சந்தேகம் வருகின்றதோ, அப்போதெல்லாம் என்னுடைய தாத்தாவிடம் சென்று அவற்றைத் தீர்த்துக் கொள்ளும் பாக்கியத்தை நான் பெற்றிருந்தேன். எனது சந்தேகங்கள் குறித்து அவருடைய விளக்கங்களைக் கேட்ட பிறகு, அதனடிப்படையில் நான் என்னுடைய கணித ஆய்வுகளை மேற்கொள்வேன். அனைத்து பழமையான கணித ஆய்வுகளும் மிகச் சிறப்பு வாய்ந்தவையாக இருப்பதையும், பொதுமக்களுக்கான மொழிபெயர்ப்புகள் இல்லாததால் அவை வெளியே தெரிவதில்லை என்பதையும் இங்கே கூடியிருக்கும் கணிதம் குறித்த ஆர்வமுள்ளவர்களிடம் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன். சமஸ்கிருதமும், நவீன கணித அறிவும் கொண்டவர்களே இந்த பண்டைய ஆய்வுகளின் சிறப்பை அறிந்து கொள்ள முடியும். மிகச் சிறந்த ஆய்வுகளை அறிந்து கொண்டு, அவற்றைப் பாராட்டக்கூடிய வகையில் மிகச் சில பேரே இருப்பது வருத்தமளிக்கிறது. அது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
தவறுதலாக கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்ற சிலவற்றை நான் இப்போது குறிப்பிட விரும்புகிறேன். இந்த தவறுகள் பொதுவெளிக்கு கொண்டுவரப்பட வேண்டும். தேவையான மொழிபெயர்ப்புகளை செய்து முடிக்கும் அளவிற்கு நான் சமஸ்கிருத அறிஞன் அல்ல. எனவே அந்தப் பணியை இங்கிருப்பவர்களிடம் நான் விட்டுவிடுகிறேன். இங்கிருப்பவர்கள் என்னைவிட சமஸ்கிருத ஞானம் அதிகம் பெற்றவர்கள் என்பதை நான் அறிவேன்.
’கணிதத்திற்கான இந்தியாவின் பங்களிப்பு பூஜ்யம்’ என்ற மிகப் பிரபலமான டிசர்ட் வாசகம் பெரும்பாலானோர் அறிந்ததே. பூஜ்யம் குறித்த கோட்பாடு இந்தியாவிலே கண்டறியப்பட்டதால் அந்த வாசகம் உண்மையானதுதான். இன்றைக்கு எண்களை நாம் எழுதுகின்ற வகையில் பார்த்தால், இந்த பூஜ்யம் என்ற எண் மிகப் பெரிய பங்கை வகிப்பது தெரியும். இப்போது நாம் கடைப்பிடிக்கின்ற இந்த முறை உண்மையில் இந்தியாவில்தான் தோன்றியது. இங்கே எண்ணுருக்களின் வெளித்தோற்றம் குறித்து குறிப்பிடவில்லை, எண்ணுருக்களின் அமைப்பு முறை குறித்தே நான் பேசுகின்றேன். இந்தியாவில் தோன்றிய இந்த முறை, பின்னர் அரபு நாடுகளுக்குச் சென்றடைந்தது. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னர் சென்று சேர்ந்தது. அரேபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டதால், ஐரோப்பியர்கள் அதனை அரேபிய முறை எண்ணுருக்கள் என்றழைக்கத் துவங்கினர். அமெரிக்காவும் அதனைப் பின் தொடர்ந்தது. பிறகு இந்தியாவும் அதனை ஏற்றுக் கொண்டது. எண்ணுருக்கள் குறித்த இந்த அமைப்புமுறையை மாற்ற வேண்டுமென்றால் அமெரிக்கா அதைச் செய்யும் வரை நாம் காத்திருக்க வேண்டும். இந்தியா எதுவும் செய்யாது. ஹிந்து எண்ணுருக்கள் அமைப்புமுறை என்பதாக இறுதியில் மாற்றுகின்ற நோக்குடன் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே ஹிந்து-அராபிக் எண்ணுருக்கள் அமைப்புமுறை என்பதாக அமெரிக்க பாடப் புத்தகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன. ஹிந்து எண்ணுருக்கள் அமைப்புமுறை என்று அமெரிக்கா மாற்றி விட்டால், ஒருவேளை அதை இந்தியாவும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்தியா அதுவரைக்கும் காத்துக் கொண்டிருக்கக் கூடாது என்பதையே நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். எது சரி என்பது குறித்த ஆய்வுகளுக்கான முன்முயற்சிகளை ஏன் இந்தியா மேற்கொள்ளக் கூடாது?
அவை ஏன் ஹிந்து எண்ணுருக்கள் என்றழைக்கப்படுகின்றன? மதத்தை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள் என்று சிலர் குறைபட்டுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. உண்மையில் ஹிந்து என்பது மதத்தைக் குறிப்பிடுகின்ற சொல் அல்ல. ஹிந்து என்ற வார்த்தையில் இருந்து வருகின்ற வகையில், அரேபியர்கள் இதனை ஹிந்த்சா என்றே குறிப்பிட்டார்கள். ஹிந்து என்ற வார்த்தை சிந்து என்ற வார்த்தையில் இருந்தே வந்ததாக அறியப்படுகிறது. பாரசீக மொழியில் S என்ற எழுத்து இல்லாததால் H எனும் எழுத்து பயன்படுத்தப்படுவதால், சிந்து நதிக் கரையோரம் வாழ்ந்தவர்களை, ஹிந்துக்கள் என்றே அவர்கள் அழைத்து வந்தனர். எனவே ஹிந்து நாகரிகம் என்பது சிந்து நதிக்கரையோரம் இருந்த நாகரிகத்தையே குறிக்கிறது. ஆக வரலாற்று ரீதியாகப் பார்த்தால், ஹிந்து எனப்படுவது மதம் பற்றி குறிப்பிடுவதாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழந்தவர்களைக் குறிப்பதாகவே இருக்கிறது. எனவேதான் அரேபியர்கள் அதனை ஹிந்து எண்ணுரு அமைப்புமுறை என்றழைத்தார்கள். இந்த அமைப்புமுறை தோன்றிய வரலாறு குறித்து நன்கு அறிந்து கொண்ட அமெரிக்கர்கள், அந்த வரலாற்றுப் பிழையைத் திருத்த முன்வந்திருக்கின்றனர்.
பூஜ்யம் என்ற எண்ணைப் பயன்படுத்தி மிகப் பெரிய எண்களை எழுதுவது குறித்து ஹாலந்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வரலாறு குறித்த நூல்களைத் தன்னிடம் கொண்டிருக்கும் இந்தியா இத்தகைய ஆய்வுகளுக்கு உதவ முன்வர வேண்டும். அதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இந்தியாவின் பங்களிப்பாக இருக்கின்ற இந்த விஷயம் குறித்த ஆய்வுகளை வெளிநாடுகள் செய்வது வெட்கத் தகுந்த செயலாக இருக்கிறது. இந்த பங்களிப்பை தன்னுடையதாக்கி கொள்ள இந்தியா முன்வர வேண்டும். இந்திய பாடப்புத்தகங்களில் இந்த அமைப்புமுறை இந்தியாவில் தோன்றியது என்ற குறிப்புகள் எதுவுமில்லாமல், இன்னும் அரேபிய எண்ணுரு அமைப்புமுறை என்பதாகவே குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்தக் கலாச்சாரம் மாற வேண்டும்.
பித்தகோரஸ் தேற்றம் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்து கடந்த ஆண்டு கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதங்களில் கலந்து கொண்ட யாருமே அவரவருக்கான கருத்துக்களுக்கான ஆதாரங்களைத் தராமலேயே விவாதித்துக் கொண்டிருந்தனர். பாடப் புத்தகங்களில் பித்தகோரஸ் பற்றிய மிகப் பெரிய பிம்பம் இங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவருக்கு முன்பாகவே, இந்தியாவில் இருந்தவை குறித்து எங்குமே குறிப்பிடப்படவில்லை. வரலாற்று ரீதியிலான தகவல்கள் இந்திய பாடப் புத்தகங்களில் இருப்பதில்லை எனும் நிலை நீடிக்கும் வரையில் இது போன்ற விவாதங்கள்தான் இந்தியாவில் நடைபெற முடியும். உண்மை என்னவென்று பார்ப்போம். உண்மையில் இவர்கள் கூறுவது போல, அந்த தேற்றத்தை பித்தகோரஸ் உருவாக்கினார் என்பதற்கான ஆதாரங்கள் எவரிடமும் இருக்கவில்லை. அது எல்லாம் வெறும் கதைதான். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை மிகத் தீர்க்கமான ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. பித்தகோரஸிற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே, பௌத்யானா எழுதிய சுல்ப சூத்திரங்கள் என்ற நூலில் அந்த தேற்றம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது எழுதப்பட்ட காலம் கிமு 800. இது போன்ற நூல்களை அவசியம் படியுங்கள். அவற்றைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளுங்கள். அவற்றைப் பற்றி எழுதுங்கள். மிகச் சரியான முறையில் இவற்றைச் செய்யுங்கள். அனைத்துமே இந்தியாவில்தான் தோன்றின என்று நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. இந்தியாவில் தோன்றியவற்றை மிகத் தெளிவாக, தவறில்லாமல் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இந்தியாவிற்குச் சொந்தமானவற்றை வெளிக் கொணர வேண்டிய வேலைகளை இந்தியாவே செய்ய ஆரம்பிக்காமல் இருந்தால், உலகத்திற்கு அது குறித்து என்ன அக்கறை இருக்கப் போகிறது?
சமஸ்கிருதத்திற்குள் கொட்டிக் கிடக்கின்ற அறிவியல் அறிவுகளை வெளிக் கொணர்ந்து உலக நாடுகளுக்கு முன் வைக்க வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்துகின்ற மஞ்சுல் தன்னுடைய அந்த உரையில் இவ்வாறான முயற்சிகள் தவறுகளின்றி மிகச் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார். சமஸ்கிருதம் அறிந்தவர்கள் மிகமிக சொற்பமான எண்ணிக்கையில் இருக்கும் போது, அவ்வாறு நடந்து விடக் கூடும் என்ற சந்தேகங்கள் எளிதில் எழக் கூடிய வாய்ப்புகளே அதிகம். தெளிவாக, தவறுகளின்றி கணிதவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள் என்று பார்கவா கூறியதை, ’நோபல்’ விருது பெற்றிருக்கும் இளைஞன் பாரம்பரியப் பெருமை குறித்து பேசுவதாகவே இந்தியர்களில் பெரும்பாலானோர் எடுத்துக் கொண்டனர்.
வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவோடு தொடர்புடைய ஒருவர் பெருமைக்குரிய விருதை வென்று விட்டால், அவரை அழைத்து நாட்டின் உயரிய பத்ம விருதுகளை வழங்குவது, அவரைப் பாராட்டுகின்ற விதத்தில் விழாக்கள் எடுப்பது என்பதாக இந்தியர்கள் கொண்டாட்ட மனநிலையில் இருக்கின்றனரே தவிர, அவருடைய ஆய்வுகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில் யாரிடத்தும் ஒருபோதும் ஆர்வம் இருந்ததில்லை. நோபல் விருது பெற்ற ஹர்கோவிந்த் கரோனாவை இந்தியர்கள் நடத்திய விதம் குறித்து V.S.நைபால், “இந்தியா அவரை வரவழைத்து பாராட்டு விழாக்களை நடத்தியது. அவர் எதுவால் பெருமை பெற்றாரோ அந்த விஷயம் அந்த விழாக்களில் யாராலும் பேசப்படவில்லை”. என்று எழுதினார். ’அவருடைய ஆய்வுகள் பற்றி பேசுவதைத் தவிர, கரோனாவுக்காக வேறு எதை வேண்டுமானாலும் நாங்கள் செய்வோம்’ என்ற மனநிலையிலேயே இந்தியர்கள் இருந்ததாக இன்னுமொரு பத்திரிக்கையாளரும் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
வழக்கம் போல இந்தியர்கள் மஞ்சுலின் கணிதப் புலமையை ஒதுக்கி விட்டு, அவராலும், பத்திரிகைகளாலும் முன்னிறுத்தப்பட்ட சமஸ்கிருதம், தபேலா ஆகியவற்றின் வழியாக அவரைப் பின்தொடர்ந்து கொண்டாடினர். தன்னுடைய ஆய்விற்குத் தேவையானவற்றை சமஸ்கிருத நூல்களில் இருந்து பெற்றுக் கொண்டதாக மஞ்சுல் பார்கவா தெரிவித்த போது, இந்தியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். சமஸ்கிருதம், தபேலா இசை என்று அனைத்திலும் கணிதத்தையே தான் கண்டதாக பார்கவா கூறிய போது கேட்டவர்களிடம் உணர்ச்சி மேலிட்டது. பார்கவா இந்தியாவிற்கு வந்த வேளையில், அவர் போகுமிடங்களிலெல்லாம் பெருவிழா எடுத்துக் கொண்டாடிய இந்தியர்கள், சமஸ்கிருதம் எவ்வாறு அவருக்கு துணை நின்றது என்பது பற்றி அறிந்து கொள்வதிலேயே மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். அவர் கலந்து கொண்ட கூட்டங்களில் எல்லாம் பார்கவாவின் ஆய்வுகளைப் பற்றிய பேச்சுக்கள் இல்லாமல், சமஸ்கிருதமும், தபேலாவும் மட்டுமே பேசுபொருளாகின.
ஆனாலும் பிரின்ஸ்டனிலிருந்து வெளியாகும் வார இதழுக்கு முன்பொரு முறை அளித்த நேர்காணலில், சிறு வயதிலேயே தாயாரிடமிருந்து தபேலா கற்றுக் கொண்டதாகவும், பின்னர் தபேலா இசைக் கலைஞர்கள் பண்டிட் பிரேம் பிரகாஷ் சர்மா, உஸ்தாத் ஜாகிர் ஹுசேன் ஆகியோரிடம் தபேலா வாசிக்க கற்றுக் கொண்டதாகவும் கூறியிருந்தார். அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. தபேலா இசைக்குள் கணிதம் இருப்பதாகவும், கிடைக்கின்ற இடைவேளைகளில் இசையில் ஈடுபட்டு பின்னர் கணித ஆய்வுகளை மேற்கொள்வது தனக்கு மனநிறைவை அளிப்பதாகவும் தெரிவித்து விட்டு, இந்த கணிதத்தை நினைத்துக் கொண்டே தபேலா வாசித்தால் அது வாசிப்பு அழகையும், உணர்வையும் கெடுத்து விடும் என்றும் கூறியிருந்தார். கணிதத்தை வைத்து தபேலா வாசிக்க முடியாது என்று மஞ்சுல் பார்கவாவே கூறியது ஒருவரது கவனத்திலும் தங்கியிருக்கவில்லை.
பண்டைய நூல்களில் இருந்து பார்கவாவிற்குத் தேவையானவற்றை எடுத்து உதவி வந்த சமஸ்கிருத அறிஞரான அவருடைய தாத்தா, சமஸ்கிருதம் தெரிந்திருந்ததாலேயே ஃபீல்ட்ஸ் பதக்கம் பெறுவதற்கான வாய்ப்பை பெற்று விடவில்லை என்பதும், மஞ்சுல் பார்கவா முழுமையான மேற்கத்திய மாணவராகவே இருந்ததாலேயே ஃபீல்ட்ஸ் விருதைப் பெற்றார் என்பதும், நமது கடந்த அல்லது தற்போதைய கல்வி முறைக்குள் அவரைப் போன்று இந்த அளவிற்கு யாரும் வெற்றி பெற்று பிரபலமடைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதும் இங்கே நிதர்சனமான உண்மைகளாகவே இருக்கின்றன. இவரோடு சேர்ந்து ஃபீல்ட்ஸ் பதக்கம் வென்ற நான்கு பேரில் சமஸ்கிருதத்துடன் தொடர்புடையவர், தபேலா வாசிக்கத் தெரிந்தவர் என்று இவர் ஒருவர் மட்டுமே இருந்திருக்கிறார் என்பதுவும் இங்கே குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. அந்த நால்வரில் சமஸ்கிருதமோ, தபேலாவோ அறிந்திராத ஈரானிய பெண்மணி ஒருவரும், லத்தீன் அமெரிக்க கணிதவியலாளர் ஒருவரும் உண்டு. ஆக பீல்ட்ஸ் பதக்கம் வென்றவருக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்கிறது, தபேலா வாசிக்கத் தெரிந்திருக்கிறது என்று கூறலாமே தவிர, சமஸ்கிருதத்தை தெரிந்து கொள்கின்ற வாய்ப்பு இருந்ததாலேயே, சமஸ்கிருதம் அறிந்த தாத்தா அவருக்கு துணை நின்றதாலேயே அல்லது தபேலா வாசிக்கத் தெரிந்திருந்ததாலேயே ஃபீல்ட்ஸ் பதக்கம் அவருக்கு கிட்டியது என்று கூறுவது எத்தகைய அறிவீனம்?
மஞ்சுல் பார்கவாவிற்கு கணிதம் மீது ஆர்வம் வருவதற்குத் தூண்டுகோலாக இருந்தவர் பார்கவாவின் தாயார் பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர் . . .கணிதவியல் பேராசிரியர் ஒருவரால் சிறு வயதிலிருந்தே பேணிப் பாதுகாத்து, கணித அறிவு ஊட்டி வளர்க்கப்பட்ட அவரது மகன் சமஸ்கிருதம் மட்டுமே அறிந்திருந்த தாத்தாவிடம் இருந்து கணித ஆற்றலைப் பெற்றுக் கொண்டான் என்று சொல்வதை நம்ப வைக்கின்ற அந்த சூழ்ச்சியின் பின்னே ஒளிந்திருப்பது எது?
”குழுவில் உறுப்பினராக இருந்த பேராசிரியர் மஞ்சுல் பார்கவா பல முக்கியமான கருத்துக்களை முன்வைத்தார். அந்தக் கருத்துக்களில் பலவும் வழக்கத்திற்கு மாறான சிந்தனை கொண்டவையாக இருந்ததோடு, எதிர்காலத்திற்குப் பொருத்தமானவையாகயும் இருந்தன. சிறந்த, யதார்த்தமான மிக உயர்ந்த தரங்களை மனதில் கொண்டு, அதற்கேற்ப கொள்கைகளை வகுத்து, வரைவறிக்கையைத் தயாரிப்பதில் அவருக்கிருந்த அளப்பரிய அர்ப்பணிப்பு என்னை வியக்க வைத்தது. குழுவின் அனைத்து முக்கியமான கூட்டங்களிலும் பங்கேற்பதற்காக பலமுறை அமெரிக்காவிலிருந்து தனது சொந்த ஏற்பாட்டில் அவர் இந்தியாவிற்கு வந்திருந்தார். அவரைப் பற்றி எனக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் என்னிடம் இல்லை” என்கிறார் வரைவறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவரான கஸ்தூரிரங்கன். தனது சொந்த ஏற்பாட்டில் கூட்டங்களில் கலந்து கொண்டதாகச் சொல்லி கஸ்தூரிரங்கன் பாராட்டுவதை உணர்ச்சிமிகையால் சொல்லப்பட்ட விஷயம் என்று புறந்தள்ளி விட முடியாது என்றாலும், இதுகுறித்த தரவுகளைப் பெற்று விவாதிப்பது என்பது தரக்குறைவான செயலாகவும், அரசின் ஏற்பாட்டில் கூட்டங்களில் கலந்து கொண்ட மற்றபிற குழு உறுப்பினர்களை இழிவுபடுத்துகின்ற செயலாகவும் ஆகிவிடக் கூடும் என்பதால் அதனை இத்தோடு விட்டு விடலாம்.
கஸ்தூரிரங்கன் பதிவு செய்திருப்பதைப் போல பார்கவா கொண்டிருந்த கல்விக் கொள்கை குறித்த வழக்கத்திற்கு மாறான சிந்தனைகள், எதிர்காலத்திற்குப் பொருத்தமான சிந்தனைகள் எவ்வாறு இருக்கக்கூடும் என்பதை அறிந்து கொள்ள இந்த குழு இறுதி அறிக்கையை ஜவடேகரிடம் சமர்ப்பித்த பின்னர், அல்லது 2019 மே மாதம் பொக்ரியாலிடம் சமர்பிப்பதற்கு முன்னர் 2019 ஜனவரி மாதம் பெங்களூருவில் உள்ள இன்போசிஸ் அறிவியல் மையத்தின் பத்தாவது விருது வழங்கும் விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட போது, இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்திக்கு அவர் அளித்த நேர்காணலின் போது இந்திய கல்வி குறித்தும், தேசிய கல்விக் கொள்கைகள் குறித்தும் பகிர்ந்து கொண்ட அவரது கருத்துக்களிலிருந்து நம்மால் சற்றே அறிந்து கொள்ள முடியும்.
”இந்தியாவில் நடக்கவே இயலாத காரியமாக இருக்கின்றவை அமெரிக்காவைப் பொறுத்த வரை எளிதாக நடைபெறக் கூடியவையாக இருக்கின்றன. அமெரிக்காவில் வயது அல்லது பணி மூப்பு பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. நான் செய்திருந்த ஆய்வுகளைக் கருத்தில் கொண்டே, ஹார்வர்ட் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்கள் என்னை வேலைக்கு அமர்த்திக் கொள்வதில் ஆர்வம் காட்டின. பிஎச்டி பட்டம் பெற்ற ஒன்றரை ஆண்டுகளிலேயே முழுமையான பேராசிரியர் பதவியை பிரின்ஸ்டன் எனக்கு வழங்கியது.
கணிதப் பாடம் என்பது ஒரு பொழுதுபோக்கு என்றே நான் நினைக்கிறேன். கணிதம் குறித்து உண்மையிலேயே ஆர்வமுள்ள ஒருவர், அது காட்டுகின்ற வேடிக்கையை முதலில் அவர் காண வேண்டும். என்னைப் பொறுத்தவரை கணிதம் எப்போதும் வேடிக்கையானதாகவே இருக்கிறது. அவ்வாறு வேடிக்கையானதாக வழக்கத்தில் இருக்கின்ற கணிதப் பாடத்திட்டங்கள் இல்லை என்று உணர்வதாலேயே, இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் கணிதம் குறித்து அச்சப்படுகிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது. புதிர்கள், மாயாஜாலங்கள், இசை என்று இவையனைத்திற்கும் உள்ளே உள்ள கணிதத்தை கற்பித்தலின் மூலம் நம்மால் கணிதத்தின் வேடிக்கையான பக்கங்களைக் காண முடியும்.
புதுமையான வழிமுறைகளைக் காண்பது, அண்மையில் வெளியாகி இருப்பவற்றைக் கற்றுக் கொள்வது, பாடத்திட்டத்தைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வது போன்ற விஷயங்களில் ஆசிரியர்களுக்கு சுதந்திரம் இல்லாததே இந்தியக் கல்வியைப் பொறுத்தவரை மிகப் பெரிய குறையாக இருக்கிறது. பெரும்பாலும் பாடம் தொடர்பான புத்தகம் ஒன்று ஆசிரியர்களிடம் கொடுக்கப்பட்டு, அதனை ஒரு பக்கம் விடாமல் அப்படியே கற்பிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. புதுமையான வழிமுறைகளைக் காணவும், தங்களை ஆக்கப்பூர்வமாக வைத்திருக்கவும், அண்மையில் வெளியானவற்றைக் கற்றுக் கொள்ளவும் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய சுதந்திரம் மற்ற நாடுகளில் எல்லாம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் ஆசிரியர்களுக்கு அத்தகைய சுதந்திரம் வழங்கப்படவில்லை. அதனைப் பெறுவதற்கு இங்கே கலாச்சார ரீதியான மாற்றம் தேவைப்படுகிறது. பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் தகுதி அடிப்படையில் பணியமர்த்தல் ஆகியவை குறித்து இருக்கின்ற கலாச்சாரத்தை மாற்றுவதைத்தான் நான் இங்கே கலாசார மாற்றம் என்று குறிப்பிடுகிறேன். இந்த கலாச்சார மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான நிறுவனக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும்.
மிக இளம் வயதிலேயே, அறிவியல் அல்லது பிற பாடங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் தற்போதைய இந்திய கல்வி முறையில், முதலாம் வகுப்பிற்கு வந்து சேரும் வரையில் குழந்தைகள் மீது கவனம் செலுத்தப்படுவதே இல்லை. ஆனால் ஆறு வயதிற்கு முன்பாகவே ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியில் 85% நடந்து முடிந்து விடுகிறது. ஆக குழந்தைகளின் மனதை ஆறு வயதிற்கு முன்பாகவே தூண்டி விட வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. இந்த வகையான தூண்டுதல் மிக வசதியான பணக்காரக் குடும்பங்களில் மிக இயல்பாக நிகழ்வதாக இருக்கிறது. ஆனால் ஏழ்மையான குடும்பங்களிலோ அல்லது பெற்றோர் இருவரும் பணிபுரிய வேண்டிய நிலையில் இருக்கின்ற குடும்பங்களிலோ இவ்வாறான அறிவாற்றல் தூண்டுதல் என்பது நடக்க இயலாத காரியமாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே முதலாம் வகுப்பிற்குள் நுழைகின்ற போதே, இவ்வாறான ஏழைக் குழந்தைகள் வகுப்பில் உள்ள பிற குழந்தைகளைக் காட்டிலும் பின்தங்கியவர்களாக இருந்து விடும் நிலையே நிலவுகிறது. எனவே ஆரம்பகால மழலைக் கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்வது மிக முக்கியமானதாக இருக்கிறது.
பலதுறை சார்ந்த கல்விக்கான தேவையும் இப்போது இருக்கிறது. 8, 9 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களை அவர்கள் ஏதாவது ஒன்ரை மட்டுமே அறிந்து கொள்ளும் வகையிலே தடைகளை ஏன் ஏற்படுத்தி வைத்திருக்கிறோம்? வாரியத் தேர்வுகளுக்கு கூட கலை அல்லது அறிவியல் என்று ஏதாவது ஒன்றை மட்டுமே அவர்களால் தேர்வு செய்து கொள்ள முடிகிறது. பின்னர் கல்லூரிக்குச் சென்று, பொறியியல் கல்வி பயிலச் செல்கிறார்கள் என்றால், அவர்கள் பொறியியல் கல்வி மட்டுமே பயில்கிறார்கள். அவர்களுடைய மூளையின் மறுபக்கம் ஒருபோதும் தூண்டப்படுவதே கிடையாது. இவையெல்லாம் மாற வேண்டியவை என்றே நான் கருதுகிறேன். அறிவியல் மூலமாக கலைகள், கலைகள் மூலமாக அறிவியல் என்று கற்றுக் கொள்ளும் வகையிலேயே நமது பண்டைய இந்திய பாரம்பரியக் கல்விமுறை இருந்திருக்கிறது. இவ்வாறான தடைகளை உடைத்து, மாணவர்களை வெளிக் கொணர வேண்டியது வரும்காலங்களில் நாம் செய்ய வேண்டிய மிகமுக்கியமான பணியாக இருக்கப் போகிறது”.
இவ்வாறாகச் செல்கிறது மஞ்சுல் பார்கவாவின் அந்த நேர்காணல். 1981ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் அக்சய் வெங்கடேஷ் என்பவர் பற்றி இந்த இடத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது. 2018ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற மாநாட்டில் ஃபீல்ட்ஸ் பதக்கம் வெங்கடேஷுக்கு வழங்கப்பட்டது. தன்னுடைய 37ஆவது வயதிலேயே வெங்கடேஷ் ஃபீல்ட்ஸ் பதக்கத்தைப் பெற்றிருக்கிறார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, 2008ஆம் ஆண்டிலிலிருந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முழுமையான பேராசிரியராக பணி புரிந்து வருகிறார். டீகின் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறையில் இவரது தாயார் ஸ்வேதா பணியாற்றி வருகிறார். பல்கலைக்கழகப் பேராசிரியர், ஃபீல்ட்ஸ் பதக்கம் என்று மஞ்சுல் பார்காவாவை அப்படியே நினைவுபடுத்துகின்ற வெங்கடேஷுக்கு அடுத்த கல்விக் கொள்கை வரைவு தயாரிக்கும் குழுவில் உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்குமோ இல்லையோ, நிச்சயமாக வரும் ஆண்டில் அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்படும் என்று நாம் கருதலாம். ஆனால் அவ்வாறு பத்மபூஷண் விருது வெங்கடேஷுக்கு வழங்கப்படவில்லை எனில், மஞ்சுல் பார்கவாவிற்கு அந்த விருது தவறுதலாக அல்லது உள்நோக்கத்துடன் வழங்கபப்ட்டது என்று மட்டும் நாம் ஒருபோதும் கருதி விடக் கூடாது. ஆனாலும் நிச்சயமாக, கல்விக் கொள்கைகளை மாற்றி விட்டாலே, மழலைப் பருவத்தில் வசதி படைத்த குழந்தைகளுக்கு கிடைக்கின்ற அறிவுத் தூண்டுதல்கள் ஏழை, கிராமப்புற குழந்தைகளுக்கும் கிடைத்து விடும் என்று மஞ்சுல் பார்கவா போன்று சொல்வதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைப்பது அரிதுதான். கணிதத்தில் நோபல் விருதிற்கு இணையான ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்ற மஞ்சுல் பார்கவாவால் இன்றைய சூழலில் ஒரு தலைசிறந்த கல்வியாளராகச் செயல்பட முடியும் என்பதற்கு அவரது சமஸ்கிருதப் புலமை, பண்டைய பாரம்பரியக் கல்வி குறித்த பெருமிதம், 2015ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்ற பத்மவிபூஷண் பட்டம் ஆகியவை மட்டும் போதும்தானே!
இறுதியாக ஒரு சுவையான சம்பவம். . .இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை சார்பில், பொறியியல் மற்றும் கணினி அறிவியல், மனித வாழ்வியல், உயிரியல், கணித அறிவியல், இயற்பியல், சமூக அறிவியல் என்று ஆறு துறைகளில் ஆய்வு செய்து வருபவர்களின் தலைசிறந்த சாதனைகளைப் போற்றும் விதத்தில் பாராட்டுச் சான்றிதழ், தங்கப் பதக்கம் மற்றும் ஒரு லட்சம் டாலர் பணம் ஆகியவற்றை உள்ளடக்கிய இன்போசிஸ் விருது கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த கணித அறிவியல் துறை ஆய்வாளருக்கான அந்த விருது பிரின்ஸ்டன் பல்கலைக்கழக கணிதவியல் துறை பேராசிரியராக இருந்த மஞ்சுல் பார்கவாவிற்கு வழங்கப்பட்டது. பத்தாவது இன்போசிஸ் விருது வழங்கும் விழா 2019 ஜனவரி 5 அன்று பெங்களூருவில் நடைபெற்றது. மஞ்சுல் பார்கவா தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் 2018ஆம் ஆண்டிற்கான இன்போசிஸ் விருதுகளைப் பெற்றவர்களுக்கு அவர் விருதுகளை வழங்கினார். மனித வாழ்வியல் துறை ஆய்வுகளுக்காக விருதை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கலை மற்றும் அழகியல் துறைப் பேராசிரியரான கவிதாசிங் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
மொகாலய, ராஜ்புதன, தக்காண கலைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் கவிதாசிங் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்போது நிலவுகின்ற சூழல் குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ”சிறிது காலத்திற்கு முன்பு வரை ஆய்வாளர்களின் சொர்க்கமாக விளங்கிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இன்றைக்கு படுமோசமான நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. எந்த அளவிற்கு என்பதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். இன்று காலையில் எனக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களை வாசித்துக் கொண்டிருந்த போது, இந்த விருதைப் பெறுவதற்காக இங்கே வருவதற்காக நான் விண்ணப்பித்திருந்த விடுமுறைக்கான விண்ணப்பத்தை நிராகரித்து பல்கலைக்கழகத் துணைவேந்தரால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலும் அதற்குள் இருந்தது. அந்த மின்னஞ்சலின்படி பார்த்தால் இங்கே என்னுடைய வருகை முறைகேடான செயலாகும்” என்று கவிதாசிங் மனவருத்தத்துடன் கூறினார். பேராசிரியர் கவிதாசிங் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் வருகைப் பதிவு குறித்து பிரச்சனைகள் எழுந்த வேளையில், பல்கலைக்கழகத் துணைவேந்தரால் துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர். அவ்வாறு நீக்கப்பட்ட வேளையில் அவருக்கு மாற்றாக அந்த துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட பாரசீக மொழித்துறை பேராசிரியர் மஜார் ஆசிப், மாணவர்களின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த மஜார் ஆசிப் இன்போசிஸ் விருதை கவிதாசிங்கிற்கு வழங்கிய மஞ்சுல் பார்கவாவுடன் தேசிய கல்விக் கொள்கை வரைவு தயாரிப்புக் குழுவில் ஒன்றிணைந்து பணியாற்றியவர் என்பது நகைமுரணாகவே இருக்கிறது.
ஒருவேளை விழா முடிந்த பிறகு கவிதாசிங்கிடம் மஞ்சுல் பார்கவா இது குறித்து பேசியிருந்தால், புதிய தேசிய கல்விக் கொள்கை அமலான பிறகு பாருங்கள். நீங்கள் இங்கே வந்து இவ்வாறு பேசுவதே தேசத்துரோக குற்றமாகி விடும் என்றுகூட கூறியிருக்கலாம். யார் கண்டது? கருத்து கேட்கிறோம் என்று சொல்லி விட்டு, இறுதி நாள் முடிவதற்கு முன்னரே, கல்விக்கொள்கை வரைவில் உள்ள விஷயங்களை அமல்படுத்துவது குறித்து நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்தால், நாமெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீறி கேள்விகளைக் கேட்பவர்கள் இவர்களது அகராதியில் தேசத் துரோகிகளாகத்தானே இருக்க முடியும்!
இதுவரை அந்த வரைவு தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் அனைவரும் கல்விக் கொள்கைகளை வரையறை செய்வதற்கான ஞானம் கொண்டவர்கள் அல்ல என்பதைக் காட்டும் விதத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏதோவொரு பின்னணியில், கல்விக் கொள்கைகள் குறித்து எதுவுமே அறிந்திராத இவர்களைப் பயன்படுத்தி, பாஜக அரசாங்கம் ஏழை எளியவர்களுக்கு கல்வியை எட்டாக் கனியாக்கும் வகையிலான தனது காவிக் கொள்கைகளை, பெருநிறுவனங்களுக்கான கல்விக் கொள்கைகளாக இந்த வரைவறிக்கையைத் தயாரித்து முன்வைத்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்காகத் தானே தவிர, தனிப்பட்ட முறையில் அவர்களை இழிவுபடுத்துவதோ அல்லது சிறுமைப்படுத்தவோ நமது நோக்கமல்ல. இதெல்லாம் இருக்கட்டும். . . இரண்டாண்டு காலமாக உண்மையில் இந்தக் குழு உறுப்பினர்கள் என்னதான் செய்தார்கள்? வரைவறிக்கை தயாரிப்பில் அவர்களின் ஈடுபாடு, பங்களிப்பு எப்படி இருந்தது?
(தொடரும்)
கட்டுரையாளர் : முனைவர் தா.சந்திரகுரு
விருதுநகர்.